2006 தி.மு.க ஆட்சியில் சுரங்கம் மற்றும் கனிமவள துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது அவர் மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சட்ட விரோதமாக செம்மண் குவாரி நடத்த உதவியதாக, 2012 அ.தி.மு.க ஆட்சியில் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்தது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்.
மேலும் இந்த சட்டவிரோத அனுமதியால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் குற்றம் சுமத்தியது.
ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் புகாரின் அடிப்படையில் பொன்முடி அவரின் மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை. அதையடுத்து அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவரை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் விசாரணை செய்தனர்.
அதன் பிறகு பொன்முடி, அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது 90 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. அத்துடன் ஒரு துணை புகாரையும், 26 கூடுதல் ஆவணங்களையும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. கடந்த மார்ச் 5-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கௌதம் சிகாமணி மற்றும் அசோக் சிகாமணி உள்ளிட்ட மூவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.

அதனடிப்படையில் இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அசோக் சிகாமணி ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்திருக்கிறது.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
