முன்னாள் அதிபர் ஜோ பைடன், 2035-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளையும் படிப்படியாக ஒழிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் முதல்படியாக படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் திட்டம் ஒன்றை செயல்படுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாடும் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜோ பைடனுக்குப் பிறகு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கிறார். இவர் பதவியேற்றதிலிருந்தே மூன்றாம் பாலினத்தை தடை செய்தது, சட்டவிரோத குடியேறிகளை நாட்டைவிட்டு அப்புறப்படுத்துவது எனத் தொடர்ந்து பரபரப்புடனும், சர்ச்சைக்குரிய வகையிலும் பணியாற்றிவருகிறார்.
இந்த நிலையில், ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்து செயல்பாட்டில் வந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை மீண்டும் அனுமதிக்க, முந்தைய அரசின் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அதிபர் ட்ரம்ப், “வேலை செய்யாத பேப்பர் ஸ்ட்ராக்களுக்கான பைடனின் அபத்தமான திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவில் அடுத்த வாரம் கையெழுத்திடுவேன். பிளாஸ்டிக்கிற்குத் திரும்பு! உங்கள் வாயில் அருவருப்பான முறையில் கரையும் ஸ்ட்ரா இல்லாமல் உங்கள் அடுத்த பானத்தை அனுபவியுங்கள்!!!” எனப் பதிவிட்டிருக்கிறார்.